மதுரை - குமரி இரட்டை பாதை பணிக்கு 'உயிர்'
'மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டப் பணியை, ஆர்.எம்.வி.என்.எல்., எனப்படும், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் மேற்கொள்ளும்' என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், நடப்பு ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி; மணியாச்சி - நாகர்கோவில் என, இரு திட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டது. 'எக்ஸ்ட்ரா பட்ஜெட் ரிசோர்சஸ்' என்ற அடிப்படையில், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இதற்கு நிதி திரட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டபடி, பொதுத்துறை நிறுவன நிதியில், நாடு முழுவதும் செயல்படுத்த உள்ள, 77 திட்டங்களின் மதிப்பீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை கேட்டு இருந்தனர்; அனைத்து ரயில்வே மண்டலங்களில் இருந்தும் அறிக்கை அனுப்பி வைத்தனர்.தெற்கு ரயில்வே சார்பில், இந்த இரு...
more... திட்டங்கள் குறித்த அறிக்கையை, 2015 ஆகஸ்டில் அனுப்பி வைத்தது.
இந்த அறிக்கையை, ரயில்வே வாரியம், திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்'கிற்கு அனுப்பி நிதி பெற வேண்டும். 34 திட்டங்களுக்கு, நிடி ஆயோக் அனுமதி பெறப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தின் முக்கியமான, இந்த இரு திட்டங்கள் குறித்த அறிக்கை அனுப்பாமல், ரயில்வே வாரியத்தில் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், 'இந்த இரு திட்டங்களின் பணியை, ஆர்.வி.என்.எல்., மேற்கொள்ளும்' என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்வே வாரியம், நிடி ஆயோக்கிற்கு அறிக்கை அனுப்பும் முன், திட்டப் பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையிலேயே, இந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிடி ஆயோக்கிற்கு விரைவில் அறிக்கையை அனுப்பி, நிதியை பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
திட்டங்கள் விவரம்
* மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி திட்டம் - 159 கி.மீ., - ரூ.1,200 கோடி
* மணியாச்சி - நாகர்கோவில் திட்டம் - 100 கி.மீ., - ரூ.800 கோடி