பொள்ளாச்சி : நீண்ட நாட்களாக பொதுமக்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதையில், ரயில்வே அதிகாரிகள் டிராலியில் சோதனை ஓட்டம் நடத்தினர். இதனால், விரைவில் அப்பாதையில் ரயில் சேவை துவக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளான திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு அந்த ரயில்பாதைகளை அகல ரயில் பாதையாக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. பணிகளுக்காக, அந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பொள்ளாச்சிக்கான ரயில் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் ரயில்கள் இயங்க துவங்கின.
இந்நிலையில்,...
more... பல்வேறு காரணங்களால் பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் முடிவடையாமல் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக, ரயில்வே அதிகாரிகள் அப்பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வந்தனர். அதையடுத்து இரவு, பகலாக செய்யப்பட்டு, தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி பாலக்காடு இடையே ரயில்வே அதிகாரிகள் டிராலியின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தினர். இதற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வெங்கிடசாமி தலைமை வகித்தார். தலைமை பொறியாளர் பிரபுல்ல வர்மா, உதவி தலைமை பொறியாளர் ராமக்கிருஷ்ணன், செயற்பொறியாளர்கள் கமல்நாத், குழந்தைமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
காலை, 11:00 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து டிராலியில் கிளம்பிய அதிகாரிகள், பாலக்காடு வரையிலுள்ள, 7 ரயில்வே ஸ்டேஷன்கள், 7 பெரிய பாலங்கள், 187 சிறிய பாலங்கள் மற்றும் தண்டவாளம் உள்ளிட்ட அமைப்புகளை ஆய்வு செய்தனர். இதன் மொத்த தொலைவு 54 கி.மீ., ஆகும். இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த உள்ள நிலையில், இந்த சோதனை ஓட்டம் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது பாலக்காடு முதல் கொல்லங்கோடு வரையில் இன்ஜினை இயக்கி சோதனையோட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் பொள்ளாச்சியில் இருந்து ரயில் இன்ஜினை இயக்கியும், பெட்டியுடன் கூடிய இன்ஜினை இயக்கியும் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களை இணைக்கும் ரயில் போக்குவரத்து, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடத்தப்பட்ட டிராலி சோதனை ஓட்டம், பொதுமக்களிடையே 'மிக விரைவில் பொள்ளாச்சி- பாலக்காடு ரயில்போக்குவரத்து துவக்கபட்டு விடும்' என்ற எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி - Register Now!