மதுரையில் கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை குழுக் கூட்டம் இன்று (ஜூலை 20) கோட்ட மேலாளர் நீனு இட்டியரா தலைமையில் நடக்கிறது. உறுப்பினர்கள் 55 பேர் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடியும், சுறுசுறுப்பான ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவும் 'புல்லட்' ரயில்களுக்கு திட்டமிடும் போது, இங்கே இன்னும் அகலப்பாதையாக மாறாத மீட்டர்கேஜ் பாதைகள் பற்றி பேசுகிறோம்.நமது எம்.பி.,க்கள் ஒற்றுமையுடன் குரல் எழுப்பினால், தென்மாவட்டங்களுக்கு தேவையான ரயில் வசதிகளை நாம் பெற முடியும்.அவற்றை இங்கு பட்டியலிட்டு உள்ளோம்.
இக்கோரிக்கைகளை கோட்ட நிர்வாகம் மூலம் உறுப்பினர்கள் வலியுறுத்துவர் என்ற நம்பிக்கையே இக்கட்டுரை....
தெற்கு...
more... ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான வருவாய் ஈட்டி தருவதில் மதுரை கோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தெற்கு ரயில்வேயில் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, இக்கோட்டத்தில் மட்டுமே இப்போதும் நடக்கிறது என்பது வருத்தமான விஷயம். இரண்டாவது அகல ரயில் பாதை பணிகளும் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி ஆமை வேகத்தில் நடக்கின்றன.
திறக்கப்படாத பல்முனை மையம்
மதுரை ஸ்டேஷனுக்கு தினமும் 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். 15 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பல்முனை கட்டடம் எட்டு ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. அதிகப்படியான வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி இம்மையத்தை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.
கூடல்நகரை மேம்படுத்தலாம்
மதுரை ஸ்டேஷனில் நிலவும் நெரிசலை தவிர்க்க கூடல்நகர் ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பத்தாண்டுகளாக வலியுறுத்துகின்றனர். ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. 2015ல் மதுரை ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்த போது, கூடல்நகரில் வைகை, பாண்டியன் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ஸ்டேஷனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழுபறியில் இரட்டை பாதை
2011ல் துவக்கப்பட்டது சென்னை -மதுரை இரட்டை அகல பாதை திட்டம். இதில் திருச்சி-திண்டுக்கல் இரட்டை பாதையில் தாமரைப்பாடி, அய்யலுார் இடையே நிலம் ஆர்ஜிதம் செய்வதில் பிரச்னை உள்ளது. தற்போது சென்னை-மணப்பாறை கல்பட்டி சத்திரம், திண்டுக்கல்-மதுரை வரை பணிகள் முடிந்துள்ளன. மதுரை-கன்னியாகுமரி, வாஞ்சிமணியாச்சி-துாத்துக்குடி 2வது அகல ரயில் பாதை பணிகள் சர்வே பணிகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே சென்னை-கன்னியாகுமரி இரு வழிப்பாதை அமையும்.
தாமதத்தால் திட்ட மதிப்பீடு உயர்வு
மதுரையில் இருந்து தேனி வழியாக போடிக்கு ரயிலில் செல்வது நிறைவேறா கனவாக உள்ளது. இங்கு அகல ரயில் பாதை, 90 கி.மீ., துாரத்திற்கு 150 கோடி ரூபாயில் அமைக்க 2009-2010ல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1.1.2011 முதல் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆறு ஆண்டுகளாகி விட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் திட்ட மதிப்பீடு 300 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.
துாத்துக்குடி புதிய பாதை துவங்குமா
மதுரை-அருப்புக்கோட்டை-துாத்துக்குடி இடையே அகல ரயில் பாதை அமைக்க 2011-2012 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ரூபாயிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் துாத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சரக்கு போக்குவரத்து துவக்க முடியும். இந்தாண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வே மற்றும் நில ஆர்ஜித பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
ஆங்கிலேயர் கனவு நனவாகுமா
ஆண்டுதோறும் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். 1920ல் திண்டுக்கல்- சபரிமலை இடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ரயில் பாதை அமைக்க ஆங்கிலேயர் ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக ரயில்வே லைன் அமையுமிடம் சர்வே செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டன. அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. 1996ல் மீண்டும் இத்திட்டத்தை ரயில்வே வாரியம் பரிசீலனைக்கு எடுத்தது. தேனியில் ஆய்வு கூட்டமும் நடந்தது. அத்துடன் சரி.
இழுபறியில் அகல பாதை பணி
மதுரை-கொல்லம் அகல ரயில் பாதை பல கட்டங்களாக நடக்கிறது. புனலுார் அருகே 27 கி.மீ., துாரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பணிகள் மிக தொய்வாக நடக்கின்றன.
புதிய ரயில்கள் எப்போது
மதுரை-சென்னை இடையே நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில் பகல் நேர ரயில், 'ஷேடோ' பாண்டியன் ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அகல பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட மதுரை-கோவை ரயில்(பழநி வழி), ராமேஸ்வரம்-கோவை ரயில்களை இயக்க வேண்டும்.
புதிய பாதைகள் எப்போது
மதுரை-காரைக்குடி, ராமநாதபுரம்-துாத்துக்குடி, மதுரை-மேலுார்-திருச்சி, காரைக்குடி-திண்டுக்கல் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும்.-எம்.ரமேஷ்பாபு படம்: அருண்முருகன்
கிழக்கு ரயில் பாதை
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:மதுரை - கன்னியாகுமரி, வாஞ்சிமணியாச்சி- துாத்துக்குடி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் மின்மயத்துடன் இரட்டை பாதை அமைக்க 3400 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு நிதி கோரப்பட்டது. மாநில அரசு நிதி தராத போதும் மத்திய அரசே முழு நிதியும் வழங்கி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியிருக்கிறேன். டிசம்பருக்குள் அடிக்கல் நாட்டப்படும். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கிழக்கு ரயில் பாதை அமைக்க மாநில அரசிடம் பேசியிருக்கிறேன்.
எம்.பி.,க்கள் என்ன செய்தார்கள்
கூடுதல் நிதி
கோபாலகிருஷ்ணன், மதுரை: என் வலியுறுத்தலால் போடி அகலரயில் பாதைக்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மதுரை-காரைக்குடி புதிய பாதைக்காக சர்வேபணிகள் துவங்கவுள்ளன. திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி ரயில்வே வாரியத்திடம் முறையிட்டுள்ளேன்.
சபரிமலை திட்டம்
உதயகுமார், திண்டுக்கல்: சபரிமலை-திண்டுக்கல் பாதை ஆய்வுக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். காரைக்குடி-திண்டுக்கல் 105 கி.மீ., புதிய பாதை அமைக்க ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொடைரோட்டில் வைகை, குருவாயூர், பொதிகை ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தவுள்ளேன்.
வனப்பகுதி என்பதால் பிரச்னை
பார்த்திபன், தேனி: நான் வலியுறுத்தியதால் மதுரை -போடி பாதைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை நிறைவேற்ற வலியுறுத்தினேன். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால்
திட்டத்தைநிறைவேற்றுவது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.லோயர்கேம்ப் வரை பாதை அமைக்க வலியுறுத்தி வருகிறோம்.
நுாற்றாண்டு திட்டம்
அன்வர்ராஜா, ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு பகல்நேர ரயில் இயக்க வலியுறுத்தினேன். சென்னை-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரத்திற்கு அதிகாலை வந்ததால் பயணிகளுக்கு பயனில்லாத நிலையிருந்தது. தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது ஒரு ரயில் காலை 7:00 மணிக்கும், மற்றொரு ரயில் அதிகாலை 3:00 மணிக்கும் வருகிறது. ராமநாதபுரம்- துாத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரையையொட்டி ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற குரல் கொடுத்துள்ளேன்.
அப்துல்கலாம் ரயில்
செந்தில்நாதன், சிவகங்கை: காரைக்குடி ஸ்டேஷனை மேம்படுத்த வலியுறுத்தினேன். காரைக்குடி-திருவாரூர் அகல பாதை பணிகள் துரிதப்படுத்தநடவடிக்கைஎடுத்துள் ளேன். டில்லி-ராமேஸ்வரம் இடையே அப்துல்கலாம் பெயரில் விரைவு ரயில் இயக்க முயற்சித்து
வருகிறேன்.
சொன்னதை செய்துள்ளேன்
ராதாகிருஷ்ணன், விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என 15 ஆண்டுகளாக மக்கள் போராடினர். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைத்து வாதாடி பாலம் கட்ட அனுமதி பெற்று தந்தேன்.
ரயில் நேரம் மாற்றினேன்
ஜெயசிங் நட்டர்ஜி, துாத்துக்குடி: துாத்துக்குடிக்கு கோவையிலிருந்து அதிகாலை 3:55 மணிக்கு ரயில் வந்தததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். அதிகாலை 5:30 மணிக்கு வரும் வகையில் மாற்றப்பட்டது. மைசூரு ரயிலை நாமக்கல் வழியாக இயக்கினால் பயணம் ஒரு மணி நேரம் வரை குறையும். இதற்கு வலியுறுத்தியுள்ளேன்.
துரந்தோ ரயிலை நீடிக்க முயற்சி
பிரபாகரன், நெல்லை: கன்னியாகுமரி இரட்டை அகல ரயில் பாதையை விரைந்து அமைக்க வலியுறுத்தியுள்ளேன். ஆளில்லாத கிராசிங்குகளில் ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். சென்னை-மதுரை, லோக்மான்யா திலக்-எர்ணாகுளம் துரந்தோ ரயிலை நெல்லை வரை நீடிக்க முயற்சித்து வருகிறேன்.